/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்
டிச 21, 2025

மணி விழாக் கொண்டாடும் சிங்கப்பூரில் வான் மழை வழாது பொழியவும், மேன்மைகொள் சைவ நீதி தழைக்கவும், கோன் உயர் தலைநிமிர்ந்து நிற்கவும் சிங்கப்பூர் ஆலயங்களின் சேவை மகத்தானது. இச்சேவையில் பிரபல வைணவத்தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தின் பங்கு மகத்தானது. பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலை திருப்பதி போலவே வைகானஸ ஆகம முறை வழுவாமல் அனைத்து உற்சவங்களும் நடைபெறுவது குறிப்பிடத் தகுந்ததாகும்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான 21 அடி ஸ்ரீ விஸ்வரூப வீர ஆஞ்சநேய சுவாமி திருவுருவம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மார்கழி என்றாலே வைகறையில் தெய்வீக சுப்ரபாத ஒலி இப்பகுதி முழுதும் பரவி பக்திப் பரவசத்தைத் தோற்றுவிக்கும். அதன்வழி டிசம்பர் 10 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை நாள்தோறும் வைகறையில் ஹோமம், திருமஞ்சணம், அபிஷேகம், அன்னதானம் என வெகு விமரிசையாக ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவம் நடைபெற்று வருகிறது. மாலையில் லட்சார்ச்சனை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தெய்வ அலங்கார சிற்பி மேற்கொண்ட சந்தணக் காப்பு அலங்காரம் காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலை மட்டுமன்றி பொற்காசு மாலையும் அணிவிக்கப்பட்டு ஜெகச் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆலயக் காட்சியையும் பக்தப் பெருமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதத்திலும் காலையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் மாலையில் சுமார் மூவாயிரம் பேரும் தலை வாழையில் உண்டுகளித்துப் பேரானந்தம் கொள்ளுகின்றனர். தலைமை அர்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவத்தை விரிவாக எடுத்துரைத்து தத்துவார்த்த விளக்கமளிப்பது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிவது போன்று உள்ளது. ஆலய மேலாண்மைக் கழகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

