/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சாக்ரமெண்டோ தமிழ் மன்ற பொங்கல் பெருவிழா
/
சாக்ரமெண்டோ தமிழ் மன்ற பொங்கல் பெருவிழா
பிப் 14, 2026

சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் பொங்கல் 2026 பெருவிழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பேராதரவளித்த புரவலர்கள் (Sponsors) ஆகிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
காலை 10 மணிக்குப் பொங்கல் பொங்குதல், கோலப் போட்டி, உறியடி, பறையிசை, பாரம்பரிய ஆடை அலங்காரபபோட்டி ஆகியவற்றுடன் விழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட சுவையான விருந்து, தமிழ்ப் பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகள், சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. மேலும் அங்காடி விற்பனையகம் மற்றும் தமிழ் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட நிழற்படக் கூடம் (Photo Booth) விழாவிற்குக் கூடுதல் அழகைச் சேர்த்தன.
இவ்விழாவை ஒட்டி நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதேபோல் உள் அரங்கு விளையாட்டுப் போட்டிகளான டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், கேரம் மற்றும் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த சில மாதங்களாக விழா திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொய்வின்றி உழைத்திட்ட விழா ஒருங்கிணைப்பாளர்கள், மன்றத்தின் இயக்குநர்கள், அறங்காவலர்கள் மற்றும் விழா நாளன்று தூணாக இருந்து உதவிய தன்னலமற்ற தன்னார்வலர்கள், இளைஞர் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
சாக்ரமெண்டோ தமிழ் உறவுகளின் பேராதரவாலேயே இப்பெரும் விழா வெற்றிகரமாக நடைபெற்றது. மீண்டும் விழாவிற்கு உழைத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் இருகரம் கூப்பி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
Advertisement

