சூரியதோஷம் இனி இல்லை
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அருள்புரியும் மதுவனேஸ்வரரை வழிபட்டால் சூரியதோஷம் நீங்கும். ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் இடையே தங்களுக்குள் யார் வலிமையானவர் என்ற போட்டி வந்தது. இதில் ஆதிசேஷன் கயிலைமலையைத் தன் ஆயிரம் தலைகளால் மறைத்துக்கொள்ள, வாயுபகவான் மலையை அசைக்க புயலாக வீசினார். ஆனாலும் மலை அசையவில்லை. இச்செயலால் உலகிற்கு தீங்கு நேரும் என வருந்தி ஆதிசேஷனிடம் தேவர்கள் வேண்டினர். அவரும் கயிலைமலையின் ஒரு சிகரத்தை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதுவே சரியான சமயம் என அந்த சிகரத்தை தெற்கில் உள்ள கடலில் வீசுவதற்காக வாயுபகவான் எடுத்தார். அச்சிகரத்தில் இருந்த ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இந்த மலை மீது பின்னாளில் சிவபெருமானுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமிக்கு மதுவனேஸ்வரர் என பெயர் வரக்காரணம் வானுலக தேவர்களே. ஆம். துவாபர யுகத்தில் விருத்திராசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தியதால் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை எல்லாம் தேனீக்களாக மாற்றி இத்தலத்தில் கூடுகட்டி பூஜை செய்யும்படி கூறினார். தேனீ வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் சுவாமிக்கு மதுவனேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு மதுவனேஸ்வரி என்றும் பெயர் ஏற்பட்டது. மதுவனம் என்பதற்கு தேனீக்கள் வாழும் காடு என்பது பொருள்.இரண்டு நிலை கொண்ட ராஜகோபுரத்தை கடந்தால் கோயிலுக்குள் நுழையலாம். வெளிப்பிரகாரத்தில் பிரம்மபுரீஸ்வரர், அகத்தீஸ்வரர், சித்திவிநாயகர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இந்த நவக்கிரகங்கள் சூரியனை பார்த்தபடியும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்ப்பதும் இங்கு விசேஷம். மூலவர் மதுவனேஸ்வர் சதுர ஆவுடையார் மீது சுயம்பு லிங்கமாக இருக்கிறார். இவரை தரிசித்தால் சூரியதோஷம் விலகும். நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் இங்கு பதிகம் பாடியுள்ளார். இங்குள்ள தீர்த்தத்தில் மாசியில் நீராடினால் விசேஷம். பிரதோஷ பூஜையை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும். முற்பிறவியில் சிலந்தியாக பிறந்த கோச்செங்கட்சோழன், யானையால் துன்பத்திற்கு ஆளானார். இதனால் கோபமுற்ற அவர் யானை ஏறமுடியாதபடி 70 மாடக்கோயில்களைக் கட்டினார். அதில் இதுவும் ஒன்று.எப்படி செல்வது: திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் 16 கி.மீ., விசேஷ நாள்: பிரதோஷம், ஞாயிறு, மாசிமகம், மகாசிவராத்திரி.நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94426 82346, 99432 09771அருகிலுள்ள தலம்: ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் 7 கி.மீ., (பதவி உயர்வு கிடைக்க...) நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94424 03926, 93606 02973, 04366 - 291 305