குபேரனாக வாழணுமா...
செல்வத்திற்கு அதிபதியான குபேரன், தான் இழந்த சங்க, பதும நிதிகளை மீண்டும் பெற்ற நாள் அட்சய திரிதியை. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில் தான். இந்நாளில் வழிபட வேண்டிய தெய்வமான அட்சய லிங்கேஸ்வரர் திருவாரூர் மாவட்டம் கீவளுரில் இருக்கிறார். இவரை தரிசித்தால் குபேரனாக வாழலாம்.திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் படைவீரர்களுடன் இங்கு வந்தார் முருகன். சூரனைக் கொன்ற பாவம் தீர இங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். கேடுகளை போக்கியருள்வதால் கேடிலியப்பர் என்றும், வரம் தருவதால் அட்சய லிங்கேஸ்வரர் என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. சிவபூஜை செய்த முருகனுக்கு அசுர சக்தியால் இடையூறு வராதபடி காவல் காத்த அஞ்சுவட்டத்தம்மன், வனமுலையம்மன் சன்னதிகள் இங்குள்ளது. 'சின்ன வெள்ளியம்பலம்' எனப்படும் நடராஜர் இடது பாதம் ஊன்றி, வலது பாதத்தை துாக்கியபடி பத்து கைகளுடன் உள்ளார். திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், சந்திரகுப்தன் இங்கு வழிபட்டு பலன் பெற்றனர். தலவிருட்சம் இலந்தை. முருகன், பத்ரகாளி, அகத்தியர், அண்ணாமலையார், குபேரன் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. சிவபூஜையைத் தொடங்கும் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டார் முருகன். கீவளுருக்கு அருகிலுள்ள மஞ்சாடி என்னுமிடத்தில் இந்த மஞ்சள் பிள்ளையார் கோயில் உள்ளது. எப்படி செல்வது: திருவாரூர் - நாகப்பட்டினம் செல்லும் வழியில் 15 கி.மீ., விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், அட்சயதிரிதியை, மகாசிவராத்திரி.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04366 - 276 733அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜர் கோயில் 15கி.மீ., (நினைத்தது நிறைவேற...)நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94433 54302, 04366 - 242 343