நவராத்திரி விளக்கம்
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. 'நவம்' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்றும், 'புதியது' என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டினர். ஒரு நாளை பகல், இரவு என பிரிப்பர். பகல் பாதி சிவபெருமானின் அம்சம். இரவு பாதி பராசக்தியின் அம்சம். எனவே தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு காலமாகும். பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி, அமைதியாக உறங்கச்செய்து தாலாட்டுகிறாள். எல்லா உயிர்களும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றை காப்பாற்றுகின்றாள். 'சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதி! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன்' என்கிறது வேதம். வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.