ஓணம் சத்ய
ஓண விருந்து பற்றிய பழமொழி பிரசித்தமானது. 'காணம் விற்றாவது ஓணம் உண்'. காணம் என்றால் குதிரைக்கு வைக்கும் கொள்ளு. காணப் பயறு விற்று கிடைக்கும் சொற்ப வருமானம் பெறுபவரும் விருந்து தயாரித்து தானும் உண்டு மற்றவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்டது இது. 'ஓணம் சத்ய' என்னும் விருந்தில் அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவை உணவுகள் தயாரிக்கப்படும். வசதி படைத்தவர்கள் 64 வகை உணவுகள் தயாரிப்பர். அரிசி மாவு அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சோறு, பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய் ஆகியவற்றை இஷ்ட தெய்வத்துக்கு நைவேத்யம் செய்வர். இந்த உணவுகளில் தேங்காய், தயிருக்கு முக்கியத்துவம் அளிப்பர். உணவு எளிதில் ஜீரணிக்க இஞ்சிக்கறி, இஞ்சிப்புளியையும் சேர்ப்பர்.