சந்தனக்காற்றே வா! செந்தமிழ்ப்பாட்டே வா!
UPDATED : ஜூலை 17, 2021 | ADDED : ஜூலை 17, 2021
சிவனுக்குரிய கைலாயம் வடக்கில் இருந்தாலும் அவர் நடராஜராக ஆடும் போது தெற்கு திசை நோக்கியே ஆடுகிறார். இதற்கான காரணத்தை பரஞ்ஜோதி முனிவர் விளக்குவதைக் கேளுங்கள். வடக்கு திசையே சிவனுக்குரியது என்றாலும் நாட்டியம் ஆடும் போது கை, கால்களை தொடர்ந்து அசைப்பதால் உடலில் களைப்பு உண்டாகும். சந்தன மரங்களை தழுவியபடி வீசும் பொதிகை மலையின் உச்சியில் புறப்படும் தென்றல் முகத்தில் பட்டால் களைப்பு தீர்ந்து புத்துணர்வு உண்டாகும். அதோடு செவிகளால் தமிழ் மொழியின் இனிமையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சிவன் தெற்கு நோக்கி நடனமாடுவதாகச் சொல்கிறார். பொதிகையின் சந்தனக்காற்றையும், செந்தமிழ்ப் பாட்டையும் சிவனே வரவேற்கிறார் என்றால் இவற்றின் பெருமையை யாரால் எடுத்துச் சொல்ல முடியும்.