கால அளவை மாற்றப்போகும் கடிகாரம்
சீன விஞ்ஞானிகள் ஒரு புதிய அணுக்கடிகாரத்தை உருவாக்கிஉள்ளனர். இது நேரத்தை அளப்பது பற்றிய நமது புரிதலை விரைவில் மாற்றியமைக்கப் போகிறது. சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலை வடிவமைத்துள்ள 'ஸ்ட்ரோன்டியம்' (strontium) ஒளியியல் கடிகாரம், 3000 கோடி ஆண்டுகள் இயங்கினாலும், வெறும் ஒரு வினாடியை மட்டுமே இழக்கும் அளவுக்குத் துல்லியமானது. இது பிரபஞ்சத்தின் வயதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமான காலம். தற்போது உள்ள கால அளவீட்டு முறைகளைக் காட்டிலும் இது பல மடங்கு துல்லியமானது. கடந்த 1967 முதல், ஒரு வினாடி என்பது 'சீசியம்' அணுக்களின் அதிர்வுகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. ஆனால், சீனர்களின் கடிகாரத்தில் பயன்படும் ஸ்ட்ரோன்டியத்தின் அணுக்கள், வினாடிக்கு பல நுாறு டிரில்லியன் முறை அதிர்கின்றன. எனவே, மிகத் துல்லியமான கால அளவீட்டை வழங்க முடிகிறது. சர்வதேசத் தர வரையறையின்படி துல்லியம் மற்றும் நிலைத்தன்மையில் புதிய சீன கடிகாரம் மைல்கல்லை எட்டியுள்ளது. இதனால், 2030 வாக்கில் வினாடிக்கான சர்வதேச வரையறை அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய அதிதுல்லிய கடிகாரங்கள் காலத்தை அளவிட மட்டுமல்லாமல், பூமியின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கவும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகளைச் சோதிக்கவும், மர்மமான 'கருமைப் பொருள்' (dark matter) குறித்த ஆய்வுகளுக்கும் உதவும். ஒரு காலத்தில் பூமியின் சுழற்சிக் காலத்தை சார்ந்திருந்த காலக்கணிப்பு, தற்போது பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேட உதவும் கருவியாக மாறியிருக்கிறது.