உள்ளூர் செய்திகள்

புயலில் புகுந்து விளையாடும் புள்ளினம்

ஆபத்துக்கு அஞ்சாமல் இருப்போர் வேடிக்கையாகத் தங்களை 'சுனாமியில் ஸ்விம்மிங் போடுபவர்கள்' என்று சொல்லிக் கொள்வர். ஆனால், செய்ய மாட்டர். புயல் வருகிறது என்றாலே கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வலியுறுத்தப்படும். ஆனால், எதற்கும் துணிந்தவனாக ஒரு பறவை புயலில் புகுந்து விளையாடுகிறது என்றால் நம்ப முடிகிறதா?பார்ப்பதற்கு அப்பாவியான புறா போல் இருக்கும் 'பெட்ரல்' என்ற பறவை இனம் தான் இந்த பயங்கரமான சாகசத்தில் ஈடுபடுகிறது. சூறாவளி வந்தால் பொதுவாகக் கடல் பறவைகள் ஓரமாக ஒதுங்கிவிடும் அல்லது அமைதியான புயலின் கண் பகுதியில் அடைக்கலம் அடையும். ஆனால், இந்தப் பறவை வேறு ரகம். புஜியோ தீவில் கூடு கட்டி வாழும் இந்தப் பறவை, புயலின் உதவியால் அட்லான்டிக் கடல் மீது 1,130 கி.மீ., பயணம் செய்கிறது. ஜி.பி.எஸ், கருவியின் உதவியால் இந்தப் பறவைகளைக் கண்காணித்த போது இது தெரியவந்தது. இதை ஆய்வு செய்த WHOI எனும் கடல்சார் கல்வி நிறுவனம் இந்த அதிசயம் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.கடலில் 26 அடி உயர அலைகளும், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் காற்றும் அடிக்கும் ஆபத்தான சூழலில் இவை 'ரிஸ்க்'கான பயணம் செய்வது ஏன் தெரியுமா? உணவுக்காகத் தான். புயல் இல்லாதபோது இவற்றின் இஷ்ட உணவான மீன்கள் உள்ளிட்ட உயிரிகளைப் பிடித்துண்ண இவை நீரின் ஆழத்திற்குச் சென்று கஷ்டப்பட வேண்டும். ஆனால் புயலோ, ஆழத்தில் இருக்கும் மீன்களை இந்தப் பறவைகளின் வாய்க்கு எட்டும் துாரத்தில் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால் இவை புயலில் பறந்தபடி விருந்து உண்கின்றன. அழிவை ஏற்படுத்தும் புயல் கூட இப்படி ஓர் ஆக்கப்பூர்வமான விஷயத்திற்குப் பயன்படுகிறது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !