நிலவின் குகைகளில் குடியேறலாமாம்!
ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்தான். நாகரிகம் வளர வளர, கட்டடங்கள் வானுயர வளர்ந்தன. இன்று நிலவில் இடம் பிடிக்குமளவு முன்னேறி விட்டான். நிலவு இங்கிருந்து பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால், அங்கு வாழ்வது சவாலானது. நிலவின் மேற்பரப்பில் பகலில் 121 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதீத வெப்பமும், இரவில் மைனஸ் 133 டிகிரி செல்ஷியஸ் குளிரும் நிலவும்.இது தவிர, எந்நேரமும் விண்கற்கள் மழைபோல் விழுந்து கொண்டிருக்கும். பூமியை விட 150 மடங்கு அதிக கதிர்வீச்சு கொண்டிருக்கும். நிலவின் மண் எல்லா பொருட்கள் மீதும் ஒட்டி அரிமானம் ஏற்படுத்தும். இவ்வளவு சிக்கலான இடத்தில் குடியேறி ஆய்வு மேற்கொள்வது கடினம் தானே?இதற்கான சிறந்த தீர்வை அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா' வெளியிட்டுள்ளது. நிலவில் சில பள்ளங்கள் இருப்பது நீண்டகாலம் அறியப்பட்டு வந்த விஷயம் தான். இருந்தாலும் அவற்றின் ஆழம், அளவு பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. எரிமலைக் குழம்புகளால் ஒரு காலத்தில் நிறைந்திருந்த இந்தப் பள்ளங்கள் இப்போது வெறும் குகைகளாக உள்ளன. 'நாசா'வால் அனுப்பப்பட்ட நிலா புலனாய்வு சுற்றுக்கல் (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் அனுப்பிய ரேடார் தகவல்களிலிருந்து, எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறும் அளவிற்கு இவை பெரியதாக இருப்பது தெரியவந்துள்ளது.இவற்றுள் மிகப் பெரியது 'Mare Tranquillitatis Pit' எனும் குகை. இதை, இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. 100 மீட்டர் அகலமும், 170 மீ., ஆழமும் கொண்ட இந்தக் குகை, நிலவின் மேற்பரப்பில் உள்ள சிக்கல்கள் ஏதும் இல்லாததாக உள்ளது. எனவே, இந்த இடம் மனிதர்கள் தங்கவும், ஆய்வுக்கூடம் அமைக்கவும் பொருத்தமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.