வைரஸ்களை கொல்லும் மொச்சை
மனிதர்களிடையே பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பவை வைரஸ்கள். இவற்றை அழிப்பதற்கான மருந்துகள் மாத்திரை அல்லது ஸ்ப்ரே வடிவில் பயன்படுகின்றன. ஆனால் மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் வைரஸ் தங்கிக் கொள்வதால் நாம் பயன்படுத்தும் மருந்து வேலை செய்யாமல் போகிறது. அதற்கான தீர்வை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை முற்றிலும் வேறுபட்ட வகையில் ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது.காய்ச்சல், சளி, நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் ஏற்படுத்தும் HSV-1, HSV-2, H1N1, H3N2 வைரஸ்கள் சுலபமாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சூயிங்கம்மைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆங்கிலத்தில் லேப்லேப் பீன்ஸ் என்று அழைக்கப்படும் மொச்சையிலிருந்து இந்த சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது. மொச்சையில் இயல்பாகவே சில வகையான புரதச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை ப்ரில் (FRIL) புரதம் என்பர். மொச்சையைப் பொடியாக்கி சூயிங்கம் ஆகச் செய்தாலும் கூட, இந்த புரதமானது வேலை செய்யவும்.மொச்சைப் புரதத்தால் ஆன சூயிங்கம்மைப் பரிசோதனை கூடத்தில் சோதித்துப் பார்த்தனர். வெறும் 15 நிமிடத்தில் 40 கிராம் புரதம் 95 சதவீத வைரஸ்களை அழித்துவிட்டது. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தப் புரதமானது பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ்களைக் கூட அழிக்கவல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே எளிமையான சூயிங்கம் கொடுத்து வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியும்.