உள்ளூர் செய்திகள்

பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்!

பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று உண்டா? நாம் தினமும் அருந்தும் பாலில் உள்ள புரதத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய பிளாஸ்டிக் படலத்தை தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். பாலின் முக்கிய புரதமான கால்சியம் கேசினேட், ஸ்டார்ச் மற்றும் பென்டோனைட் நேனோக்கிளே ஆகியவற்றை திரட்டிச் சேர்க்கும்போது உயிரியல் பாலிமர் கிடைக்கிறது. உணவுப் பொட்டலங்களுக்குத் தேவையான வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும் விதத்தில், பாலிலுள்ள பொருட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சாதாரண பிளாஸ்டிக்குகள் பல நுாற்றாண்டுகள் அழியாமல் நிலத்தில் தங்கிவிடும். ஆனால், பால் பிளாஸ்டிக், சாதாரண மண்ணில், ஏறத்தாழ 13 வாரங்களிலேயே முழுமையாக மட்கிவிடும் என்று பரிசோதனைகளில் உறுதியாகிஉள்ளது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும், நச்சுக்களைக் கொண்டவை செயற்கைப் பாலிமர்கள். அவற்றுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க, பாதுகாப்பான மாற்றுகளைக் கண்டறிய, உலகமெங்கும் நடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இத்தகைய மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகள், சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதோடு, செயற்கைப் பாலிமர்களால் மனித ஆரோக்கியத்திற்கும் சூழலியலுக்கும் ஏற்படும் அபாயங்களையும் கணிசமாகக் குறைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !