உள்ளூர் செய்திகள்

உணவு ஒவ்வாமைக்கு தீர்வு

எல்லாருக்கும் எல்லா வகையான உணவுகளும் பிடிப்பதில்லை. விருப்பு, வெறுப்பு தாண்டி சிலருக்குச் சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக இந்த உணவு ஒவ்வாமை பிரச்னை அதிகரித்து வருகிறது. 12ல் ஒரு குழந்தைக்கும், 10ல் ஒரு பெரியவருக்கும் இந்த ஒவ்வாமை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ஏராளமான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஒவ்வாத உணவை உண்பது வாந்தி, வயிற்று வலியிலிருந்து துவங்கிப் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருக்கும். அவர்களுக்குச் சில உணவுகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இத்தகைய ஒவ்வாமையைச் சரி செய்வதற்கான மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹோப்கின்ஸ் ஆய்வு மையம், ஆஸ்துமாவிற்குப் பயன்படும் 'ஒமாலிசுமாப்' என்ற ஒருவகை மருந்து ஒவ்வாமையைத் தடுக்க பயன்படும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த மருந்து, உணவு ஒவ்வாமை கொண்ட பலரின் வாழ்க்கை முறையையே நல்லபடியாக மாற்றவல்லது என்று கூறுகிறார்கள்.விஞ்ஞானிகள், 1 முதல் 55 வயதுடைய 180 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலக்கடலை ஒவ்வாமையுடன், முந்திரி, பால், கோதுமை, முட்டை, வால்நட் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டின் மீது ஒவ்வாமை உடையவர்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை, 2 முதல் 4 வார இடைவெளியில் ஒமாலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. 16 வாரங்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நிலக்கடலை ஒவ்வாமை இருந்தவர்களுக்கு அது குணமாகி இருந்தது. அதாவது 600 மி.கி., நிலக்கடலை புரதத்தை எடுத்துக் கொண்டும் அவர்களுக்கு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை. அத்துடன் முந்திரி, பால், முட்டை ஆகியவற்றின் மீதான ஒவ்வாமை முறையே 41, 66, 68 சதவீதம் குறைந்திருந்தன. எதிர்காலத்தில் இந்த மருந்து மேலும் பல உணவு ஒவ்வாமைகளைக் குணப்படுத்தவும் பயன்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !