உள்ளூர் செய்திகள்

வேட்டையாட கற்றுக்கொண்ட அணில்கள்

அணில்கள் என்றால் பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை உண்ணும் சைவப் பிராணி என்று தான் நினைத்திருப்போம். ஆனால், அவை அனைத்துண்ணிகள். சில நேரங்களில் சிறிய பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், பல்லிகள் ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. ஆனால், முதன்முறையாக அணில்கள் வேட்டையாடி ஓர் உயிரைக் கொன்று உண்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர். இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்று கூறுகிறார்கள்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு விஞ்ஞானிகள் குழு 12 ஆண்டுகளாக அணில்களைத் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறது. இதுவரை கலிபோர்னியாவில் வாழும் அணில்கள் இறந்த அல்லது வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தையோ உட்கொண்டு பார்த்தது இல்லை. ஆனால், கடந்த ஆண்டு 2024 ஜூன், ஜூலை மாதங்களில் கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் அணில்கள் கண்காணிக்கப்பட்டன. அப்போது அவை கலிபோர்னியா வோல் (California vole) எனப்படும் எலி போன்ற ஒரு சிறிய கொரித்துண்ணியை வேட்டையாடுவது தெரிய வந்தது. மனநலம் குன்றிய சில அணில்கள் தான் இவ்வாறு வேட்டையாடி உண்கின்றன என்று முதலில் நினைத்திருந்தனர். ஆனால், ஆண், பெண், குட்டி அணில், பெரிய அணில் என அனைத்துமே இப்படியாக வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. தங்களை விட உருவில் சிறிய இந்த வோல்களின் மீது மிக வேகமாகப் பாய்ந்து, அவற்றின் கழுத்தைக் கடித்துக் கொல்கின்றன. இது வீடியோவாகவும் பதிவாகி இருக்கிறது.அணில்கள் மனிதர்களோடு நீண்ட காலமாக வாழ்பவை. அவற்றைப் பற்றி நாம் நன்றாக அறிவோம். அது வேட்டையாடி உண்ணும் வழக்கத்தைக் கொண்டது இல்லை. முதன்முறையாக இப்போதுதான் அணில்களிடையே வேட்டையாடும் விசித்திர வழக்கம் கண்டறியப்பட்டுள்ளது. பருவ கால மாற்றங்கள், காடுகள் அழிக்கப்படுதல், போதுமான உணவு கிடைப்பதில் சிக்கல் இப்படியான காரணங்களால் தான் அணில்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !