உள்ளூர் செய்திகள்

கடல் அலைகளில் கூடுதல் மின்சாரம் தயாரிக்கும் நுட்பம்

கடல் அலைகளின் முழு விசையையும் பயன்படுத்தி அதிக மின்சாரத்தைப் பெறுவது இன்று சவாலானதாகவே இருக்கிறது. இந்த தேக்க நிலையை போக்க செம்மையான அலை மின்னாற்றல் தொழில்நுட்பத்தை ஒசாகா பல்கலை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர். இது வழக்கம்போல அலை ஆற்றல் கருவிகளைத் தனித்தனியாக இயக்காமல், அவற்றை ஒரு குறிப்பிட்ட வரிசையில் இணைப்பதன் வாயிலாக அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று ஒசாகா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தனித்தனி கருவிகளாகச் செயல்படுவதைக் காட்டிலும், ஒரு குழுவாக அவை இயங்கும்போது உற்பத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்தடுத்து வரும் அலைகள் குவியும் இடத்தில், அதிக ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். திரவ இயக்கவியல் மற்றும் கடலோரப் பொறியியல் மாதிரிகளை வைத்து சோதித்தபோது, தனித்தனியாக அலை ஆற்றல் கருவிகள் மிதக்கும்போது உருவாகும் மின்சாரத்தைவிட, அந்தக் கருவிகள் பலவற்றையும் கூட்டாக மிதக்கும்படி செய்தால், அலைகள் குவியும்போது கிடைக்கும் கூடுதல் விசையை பயன்படுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க முடியும். இக்கண்டுபிடிப்பு, அலை ஆற்றலை ஒரு சோதனை முயற்சி என்ற நிலையிலிருந்து நம்பகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றும் வல்லமை கொண்டது. பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டுள்ளதால், இதுபோன்ற, சின்னச் சின்ன செயல்திறன் மேம்பாடுகளால் கூட உலகளவில் துாய்மை எரிசக்தி மாற்றத்திற்கு வித்திடும். இருப்பினும், ஆய்வக மாதிரிகளை அசலான கடல் சூழலில் நிலைத்து நிற்கும் வலிமையான கட்டமைப்புகளாக மாற்றுவதே அடுத்தகட்ட சவால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !