உள்ளூர் செய்திகள்

பொங்கலுக்கு திலக் வைக்கும் "கூரைப்பூ நகரங்கள் மறந்த மருத்துவ "புத்தகம்

'தை' பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. அதற்கான தொடக்கம், காப்புக் கட்டும் நிகழ்ச்சி. மார்கழி கடைசியில் பழையதை போக்க 'போகி'யும், பின் புதியவை புகுவதற்கு 'தை'யும் உதவுகிறது. தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் 'பூ' காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.'காப்பு'க் கட்டுவதின் நோக்கம், இன்றைய தலைமுறைக்கு தெரிவது இல்லை. அதன் பயனை, 'இருபது'களுக்கு விளக்க, 'அறுபது'கள் முன் வருவதில்லை. நகரங்களில் வசிப்போர், ஆயுத பூஜைக்கு பழம் வாங்குவதைப் போல், பொங்கலன்று 'கூரைப்பூ' வாங்கி கடமையை முடிக்கின்றனர். 'எதற்காக அதை வைக்கிறோம்,' என்பது, அவர்களுக்கு தெரிவதில்லை.பயனறிந்து, 'கூரைப்பூ' பயன்படுத்தி, பொங்கல் கொண்டாடுவது, கிராமங்களில்தான். அதன் பயன்பாடு, மகத்துவத்தை அவர்கள்தான், நன்கு உணர்ந்துள்ளனர். 'அப்படி என்ன அதில் இருக்கு,' என்கிறீர்களா? கூரைப்பூவில் ஆறு விதமான தாவரம் இருக்கு; அதன் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குணம் உண்டு. 'மா இலை' காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும், 'கூரைப்பூ' (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான சிறுநீர்போக்கு ஏற்படுத்தும், விஷ முறிவுக்கு உதவும். 'வேம்பு இலை' நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது, கொசுக்களை தடுக்கும். 'ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ' என்ற முன்னோர் மொழிக்கேற்ப 'ஆவாரம் பூ', சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும்.'தும்பைச் செடி' மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். 'பிரண்டை' வயிற்றுப் புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்தது. இத்தனை சிறப்புகள் இருந்தும், ரூ.5க்கு வாங்கும் சம்பிரதாய பொருளாக மாறிவருகிறது கூரைப்பூ.இந்த ஆறு வஸ்துகளையும், மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் முன் தொங்கவிட்டால், 'மங்கலம், பாதுகாப்பு, ஆரோக்கியம்,' கிடைக்கும் என, நம் முன்னோர்கள் எழுதிச் சென்றுள்ளனர். கிராமங்களில், 'அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை,' நோய்களிலிருந்து பாதுகாக்க, கூரைப்பூக்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். ஆங்கில மருந்துகளுக்கு அடங்காமல், நம்மை ஆட்டி வைக்கும் நோய்கள் வந்த பிறகு தான், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.ஆம், நாமே தொலைத்து, நாமே தேடிக் கொண்டிருக்கும் மருத்துவ புத்தகங்களில், 'கூரைப்பூவின்' பக்கமும் ஒன்று. 'மலர்ச் செண்டு' கொடுக்கும் நவீனத்தில் இருந்தாலும், நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமையை உணர்ந்து, கூரைப்பூ பயன்படுத்துங்கள் தமிழர்களே!-ஆனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்