மரமும், மகிழ்வும்!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வன்னிப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில், 2010ல், 7ம் வகுப்பு படித்தேன். தமிழ் ஆசிரியையாக இருந்த திரிபுரம், பின், தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார். வளாகத்தில் மரங்கள் நட்டு விழிப்புணர்வு ஊட்டினார். ஒருநாள், மாலை நேர வகுப்பை, பள்ளி வளாகத்தில், அழகிய மரத்தடியில் நடத்தினார். தெருவில் சென்றவர்களையும், வாகனங்களையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். திடீரென என்னை அழைத்து, 'மொழி என்றால் என்ன... அது எதற்கு பயன்படுகிறது...' என வினா தொடுத்தார்.பயத்துடன் எழுந்து நின்றேன். அன்றைய பாடத்தை கவனிக்காத போதும், 'மொழி என்பது மனிதர்கள் உணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. பிறருக்கு கருத்தை புரிய வைக்கவும், தகவல் பரிமாறி கொள்ளவும் பயன்படுகிறது...' என சரளமாக கூறினேன். ஆச்சரியம் கலந்த பார்வையுடன் கர ஒலி எழுப்பச் சொல்லி பாராட்டினார். அச்சம் தணிந்து, நிம்மதியுடன் அமர்ந்தேன். என் வயது, 24; பள்ளி இறுதி வகுப்பை முடித்த பின், அரசு தேர்வுக்காக, தமிழ் வழி பயிற்று சான்றிதழ் பெற அந்த பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது, நெடிதுயர்ந்து நின்ற மரங்களைக் கண்டு வியந்தேன். மரத்தடியில் அந்த ஆசிரியை நடத்திய வகுப்பின் நினைவு மனதில் அலைமோதியது.- ஜி.தமிழ்ச்செல்வன், விழுப்புரம்.தொடர்புக்கு: 90952 56359