பசுவின் மடியில் நீர் கோர்த்தல் நோய் இயற்கை வைத்தியத்தில் தடுக்கலாம்
சினை மாடுகளுக்கு நீர் கோர்த்தல் தடுக்கும் முறை குறித்து, காஞ்சிபுரம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.இதில், சினை பிடித்திருக்கும் மாடுகளுக்கு, மடியில் நீர் கோர்த்து விடும். இதுபோன்ற மாடுகள் படுக்கவும் முடியாமல், எழுந்து நிற்கவும் முடியாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகும். இதனால், மாடுகள் தீவனம் ஏற்பதில் சிரமத்தை சந்திக்கும். இதை தவிர்க்க, இயற்கை வைத்தியத்தில், மடியில் நீர் கோர்க்கும் முறையை எளிதாக கட்டுப்படுத்தலாம்.ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் துாள், 200 மில்லி கடுகு எண்ணெய், இரண்டு பல் பூண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடுடேறிய பின், இடித்த பூண்டு, மஞ்சள் துாளை போட்டு நன்கு வதக்கிய பின், ஆறவைத்து உபயோகிக்க வேண்டும்.மடியில் நீர் கோர்த்த இடத்தில் வட்ட வடிவத்தில் ஒரு நாளைக்கு நான்கு முறை என, மூன்று நாட்களுக்கு தடவ வேண்டும். சினைமாடுகளுக்கு மடியில் நீர் கோர்த்துள்ளதா என, உறுதி செய்த பின், இந்த இயற்கை வைத்தியத்தை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594