உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் பி.எம்., ஸ்ரீ திட்ட நிதி பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது ஆந்திரா

அமராவதி: 'அரசு பள்ளிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாக கொண்ட மத்திய அரசின், 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தின் நிதி பயன்பாட்டில், நாட்டிலேயே ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது' என, அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை 2020ன் தொடர்ச்சியாக, 'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும் பி.எம்., ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு, 2022ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் வாயிலாக, 14,500 அரசு பள்ளிகளை இணைத்து, அவற்றை பிரதமரின் முன்மாதிரி பள்ளிகள் என்ற பெயரில் மேம்படுத்தி, பிற பள்ளிகளுக்கு வழிகாட்டியாக்க வேண்டும் என்பதே, மத்திய கல்வி துறையின் நோக்கம்.மொத்தம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தில், பல்வேறு மாநில அரசுகள் பங்கேற்றுள்ளன. அவர்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் இந்த திட்டத்தின் பயன்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது: 'பி.எம்., ஸ்ரீ' திட்டத்தின் கீழ் நிதி பயன்பாட்டில், நாட்டிலேயே ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, மாநிலம் முழுதும் 844 'ஸ்மார்ட்' சமையலறைகளை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் உள்ள 430 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 1.06 லட்சம் மாணவிகளுக்கு 53,180 அடுக்கு கட்டில்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மாநிலம் முழுதும் உள்ள அரசு ஜூனியர் கல்லூரிகளில் பயிலும் 2.03 லட்சம் மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும், ஆண்டுதோறும் 15,000 ரூபாய் வழங்கும், 'தல்லிகி வந்தனம்' என்ற திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளும் சேர்க்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தெலுங்கு அகாடமியால் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள், 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்