கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வின்றி தவிப்பு
திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள், 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 60 அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 2000 ல் கம்ப்யூட்டர் பயிற்சி திட்டம் துவங்கப்பட்டது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தவிர்த்து மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயிற்சி அளிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., படித்த 248 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் இருந்து மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் ஆண்டிற்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளாக ரூ.4,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதால், கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வின்றி தவித்து வருகின்றனர். இவர்களை கல்லூரியில் நிகழ்ச்சி நிரல் அமைப்பாளர்களாக நியமிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: எங்களுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு வேறெந்த பணிக்கும் செல்ல முடியாததால், வீட்டிலே முடங்கியுள்ளோம். ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும். அகாடமிக் பாடப்பிரிவுகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்குவதை போல் எங்களுக்கும் மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், என்றனர்.