மாற்றுச் சான்றிதழ்களை திருப்பி தராத கல்லூரி நிர்வாகம்: மாணவியர் புகார்
சென்னை: திரு.வி.க., நகரில் உள்ள அபிஜெய் மருத்துவமனை நிர்வாகத்தார், நர்சிங் மாணவியருக்கு பள்ளி மாற்று சான்றிதழ்களை திருப்பி தராமல் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏழை மாணவியர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார்திரு.வி.க.,நகர் அடுத்துள்ள பெரவள்ளூர் இ.எஸ்.ஐ., சாலையில், கடந்த 15 ஆண்டுகளாக டாக்டர் லட்சுமணன் சரவணன், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர், அபிஜெய் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் 2011ல், நர்சிங், பாரா மெடிக்கல் கல்லூரிகளை துவங்கி உள்ளனர். அங்கு படிக்கும் மாணவியருக்கு, உரிய பயிற்சி அளிக்காமல் வார்டுகளில் பணியமர்த்தி, கொத்தடிமை போல் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால், கல்லூரியை விட்டு நந்தினி, எழிலரசி ஆகிய மாணவியர் வெளியேறினர். ஆனால், அவர்களின் பள்ளி சான்றிதழ்களை அவர்களிடம் அளிக்காமல், அடம் பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாணவியர் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 படித்து கொண்டு இருந்தோம். அப்போது, அபிஜெய் மருத்துவமனையை சேர்ந்தவர்கள், வகுப்பறைக்கு வந்து, மூன்றாயிரம் ரூபாய் கட்டணத்தில் நர்சிங் பட்டயப்படிப்பு கற்று தருகிறோம் என்றனர். அதை நம்பி, படிப்பில் சேர்ந்தோம். உதவித்தொகை இல்லை எங்களை போன்று, வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவியரும் சேர்ந்தனர். சில நாட்கள் மட்டுமே வகுப்பு நடந்தது. எங்களுக்கு, மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாத நிலையில், வார்டுகளில் பணி அமர்த்தினர். முதல் உதவி அளிப்பது பற்றி கூட, எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது, வார்டுகளில் பணியமர்த்தினால் நோயாளியை எப்படி எங்களால் கவனித்து கொள்ள முடியும்? இறப்பு நேர்ந்தால், எங்கள் மீது தான் பழிவிழும் என பயந்தோம். அங்கு மாணவியரை கொத்தடிமைபோல் நடத்துகின்றனர். மாத உதவித்தொகையாக 1,500௦ ரூபாய் தந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களை சொல்லி, அந்த தொகையை அபராதமாக காட்டி, பிடுங்கி விடுவர். மிரட்டல்துவக்கத்தில், அரசு சான்றிதழ் தருவோம் என்றனர். பின், அதெல்லாம் கிடையாது என்றனர். இதனால், கல்லூரியில் இருந்து நின்று விட்டோம். பள்ளி மாற்று சான்றிதழ்களை திருப்பி கேட்டால், தர மறுக்கின்றனர். மேலும், மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயப்படுகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். மாணவியரின் குற்றச்சாட்டு குறித்து, டாக்டர் மகாலட்சுமியிடம் கேட்ட போது, ”புகார் தெரிவிக்கும் நந்தினி, எழிலரசி மீது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த பிரச்னை தொடர்பாக, அனைத்து விவரங்களும், எங்கள் வழக்கறிஞருக்கு தான் தெரியும்,” என்றார். அவரது வழக்கறிஞர் மணிமாறனிடம் கேட்டபோது,”அந்த மாணவியர், சேர்க்கையின்போது, உண்மையான பள்ளி சான்றிதழ்களை தரவில்லை. அதை மறைத்துவிட்டு புகார் தருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், மேற்கொண்டு தெரிவிக்க இயலாது,” என்றார். புளியந்தோப்பு துணை போலீஸ் கமிஷனர் சுதாகர் கூறுகையில், ”மாணவியரின் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். உரிய முறையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,” என்றார்.