நான் முதல்வன் திட்டத்தால் தமிழக மாணவர்கள் சாதனை: உதயநிதி பெருமிதம்
சென்னை: 'முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான, 'நான் முதல்வன்' திட்டத்தால், குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கடந்த அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, போட்டி தேர்வுகளில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 2017க்கு பின், தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில், குறிப்பாக யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுகளில், தமிழகத்தின் பங்களிப்பு படிப்படியாக குறைந்தது.2021ல் குடிமைப்பணி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக குறைந்தது. இந்நிலையை, நான் முதல்வன் திட்டம் மாற்றியுள்ளது. குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு நிதி உதவி, தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.கடந்த 2023 - 24 முதல், ஆண்டுதோறும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.ஒரு முறை ஊக்கத்தொகையாக, முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவோருக்கு 25,000 ரூபாய், நேர்முக தேர்வுக்கு தகுதி பெறுவோருக்கு 50,000 ரூபாய் வழங்கி, தி.மு.க., அரசு உதவிக்கரம் நீட்டியது.இதனால், 2023 - 24ல், 453 மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அடுத்து, 2024 - -25ல் 559 ஆக அதிகரித்தது. அவர்களில், 134 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றனர; 50 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களில் ஒருவரான சிவசந்திரன், அகில இந்திய அளவில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார்.தற்போது, 2025 - 26ல் நடந்த முதல்நிலை தேர்வில், 659 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 155 பேர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்று உள்ளனர். இதில், 87 பேர் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இது, முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சமூக மாற்றத்தின் சான்று.நான் முதல்வன் திட்டத்தால் தென்காசியைச் சேர்ந்த, ஏழை பீடி தொழிலாளியின் மகள் இன்பா ஐ.பி.எஸ்., அதிகாரியாகி உள்ளார். தடைகள் நீக்கப்பட்டால், தமிழக மாணவர்கள் சாதனை படைப்பர் என்பதற்கு இதுவே உதாரணம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.