தொழிலாளர் துறையின் உதவி தொகையுடன் ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: தொழிலாளர் துறையின் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.அரசு தொழிலாளர் துறை பயிற்சிப் பிரிவு இயக்குநரகம் சார்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சி பிரிவுகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் https://www.centacpuducherry.in/ அல்லது https://labour.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் செலுத்த தேவையில்லை. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.இந்த தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைவருக்கும் பயிற்சியின்போது ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தகுதித்தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு பயிற்சி பிரிவிலும் ஒருவருக்கு கூடுதலாக மேலும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மதிய உணவு, பாடப் புத்தகம், சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனுார், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய இடங்களிலும்; காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இங்கு கம்ப்யூட்டர், எலக்ட்ரீஷியன், சிவில், ஏ.சி., மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஒயர்மேன், தையல் கலை, அழகு கலை, வெல்டர், டர்னர், டிரோன் டெக்னீஷியன், சோலார் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், பிட்டர், உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருப்பின் மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணம் ஏதுமின்றி உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு உதவி மையத்தினை 8056786775 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.