உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் விதிமீறல்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு விதிமீறல் நடப்பதை தடுக்க வேண்டும் என பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்ட இளநிலை மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்தாண்டும் கடந்த ஜூலை மாதத்திலிருந்து இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் தலைமையிலான சேர்க்கை குழு, தொடர்ந்து 3 கட்ட கலந்தாய்வு நடத்தி, விதிகள்படி உயர்ந்த கட்டாப் மதிப்பெண், இன சுழற்சி ஒதுக்கீடு அடிப்படையில், சேர்க்கை வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் போட்டி நிலவுவதால், இந்தாண்டும் சிலர் புரோக்கர்கள் போல் செயல்பட்டு, மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் பணம் பெற்று, சீட் வாங்கி தருவதாக புகார் எழுந்துள்ளது. சில அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் சிலர் மூலம், விதிமீறி சேர்க்கை இடங்களை பெற்று வருவதாக பெற்றோர் தரப்பில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அவர்கள் மேலும் கூறுகையில், இந்தாண்டு கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அந்த கூடுதல் காலி இடங்களை வெளியே தெரிவிக்காமலும், சில முக்கிய பாடப் பிரிவுகளுக்கான காலி இடங்களை மறைத்து, விதிமீறி சேர்க்கை வழங்கப்படுகிறது.கவுன்சிலிங் பணிக்கு உதவுவதாக வரும் சில ஆசிரியர், அலுவலர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் செல்வாக்கு மூலம், சிலருக்கு சீட் வாங்கி தருவதாக பணம் பெற்று, வாங்கி கொடுக்கின்றனர். இதனால், அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, புகார் எழுந்ததால், கல்லூரி சேர்க்கை குழுவினரை நேரில் அழைத்து, உள்ளூர் அமைச்சர் தரப்பினர் எச்சரித்து, தகுதியுள்ளவர்களுக்கு சீட் வழங்க கூறியுள்ளனர். இதனால், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை, காலியிடம், கட் ஆப் மதிப்பெண் போன்றவற்றை வெளிப்படையாக தெரிவித்து, நேர்மையான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்