வெளிநாட்டு பல்கலையில் படிக்க கடன் வழங்கும் திட்டம் அறிவிப்பு
கோவை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வெளிநாட்டு பல்கலைகளில் உயர்கல்வி மேற்கொள்வதற்கான கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.குடும்ப ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். 85 சதவீதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் மூலமும், மீதமுள்ள 15 சதவீதம் தமிழக அரசாலும் வழங்கப்படும்.கல்வி நிறுவனத்துக்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில், கடன் தொகை விடுவிக்கப்படும். முந்தைய ஆண்டுகளில், தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டண தவணை வழங்கப்படும். வயது வரம்பு - 21 முதல் 40 வயது. ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.இதற்கான விண்ணப்பத்தை, www.tabcedco.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த ஆவணங்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விண்ணப்பிக்க வேண்டும்.இத்தகவலை, கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.