உள்ளூர் செய்திகள்

போதிய ஆசிரியர்களின்றி திணறும் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள்

போதிய அளவிற்கு பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்கள் கிடைக்காததால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பிஎச்.டி. ஆராய்ச்சிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்துள்ளபோதிலும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் பலரும் திணறி வருவதால், இந்த பிரிவினரின் தேவை அதிகரித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமெனில் பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், நெட் அல்லது, ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு முன், பணிகளில் சேர்ந்த ஆசிரியர்கள், தற்போது புதிய விதிமுறைகளின்படி உரிய தகுதியை பெற வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன. சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 600க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த இரு துறைகளிலும் தேவையான அளவிற்கு பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்கள் கிடைக்கவில்லை என்ற புலம்பல் அதிகரித்து வருகிறது. கல்லூரி முதல்வர் பதவியில் நியமிக்கப்படுவர்கள் பிஎச்.டி., ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும். தமிழகத்தில், பிஎச்.டி. ஆராய்ச்சிக்காக ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்துள்ளனர். எனினும், மூன்று ஆண்டுகளுக்குள் ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற இலக்கை பூர்த்தி செய்ய பெரும்பாலானோர் தவறுவதால், மூன்று ஆண்டுகள் என்பது ஏழு ஆண்டுகள் வரை இழுத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. முதுகலை பட்டம் பெற்ற அனைவரும், பிஎச்.டி. ஆராய்ச்சி செய்ய தகுதி பெறுகின்றனர். ஏதாவது ஒரு பல்கலையோ அல்லது கல்லூரியோ அல்லது அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனத்திலோ பதிவு செய்துகொண்டு, தேர்வு செய்த துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். முழு நேர ஆராய்ச்சி மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி என இரு பிரிவுகளின் கீழ் வரலாறு, அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமானோர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒருவர், பிஎச்.டி., ஆராய்ச்சிக்கு பதிவு செய்ததும் அவர் யாராவது ஒரு, கைடு வசம் ஒப்படைக்கப்படுகிறார். கைடாக இருப்பவர்கள், பிஎச்.டி. ஆராய்ச்சி முடித்திருக்க வேண்டும். ஒரு, கைடிடம் நான்கு முதல் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் வரை இருப்பர். ஒருவர், குறித்த காலத்தில் ஆராய்ச்சியை முடித்து, முனைவர் பட்டம் பெற வேண்டும் எனில், கைடின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். பல, கைடு-கள், ஆராய்ச்சி செய்ய வருபவர்களை, தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவதும், ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்துவதும் பரவலாக நடப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திட்டமிட்ட காலத்திற்குள் ஆராய்ச்சியை முடிக்க முடியாத நிலை இருப்பதாக இந்த துறையில் இருப்பவர்கள் கூறுகின்றனர். சென்னை பல்கலை மற்றும் இதன்கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்த ஆண்டு ஜூன் வரை 469 பேர் பிஎச்.டி. ஆராய்ச்சிக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், மற்ற பல்கலைகளின் கீழ் ஆயிரக்கணக்கானோர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில், முழு நேர ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும், பல்கலைக்கழக கல்வி உதவித்தொகை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. பகுதி நேர ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் பெரும்பாலும், கல்லூரி ஆசிரியர்களாகத்தான் (புதிய விதிமுறைப்படி பிஎச்.டி., ஆராய்ச்சி தகுதியை பெறுவதற்காக) இருக்கின்றனர். இவர்களுக்கு மட்டும் கல்லூரிப் பணியில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வழக்கமான சம்பளம் மற்றும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. சென்னை பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு, யு.ஜி.சி. கல்வி உதவித்தொகை 14 ஆயிரம் ரூபாயும், பல்கலைக்கழக உதவியாக, மாதம் 7,000 ரூபாயும் வழங்கப்படுகின்றன. ஆராய்ச்சி நிறுவனங்களை அதிகப்படுத்தி, ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாநில அரசு தாராளமாக நிதியுதவியும் அளித்தால், அதிகளவில் பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்களை உருவாக்கலாம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகளவில் ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் : முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தல்பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்கள் தேவை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள நிலை ஆகியவை குறித்து, கல்வியாளரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும் மற்றும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான பாலகுருசாமி கூறியதாவது: கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 40 சதவீதம் அளவிற்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேவையான அளவிற்கு பிஎச்.டி. முடித்தவர்கள் கிடைக்காதது தான் இதற்கு காரணம். ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சீனா, தைவான், கொரியா ஆகிய நாடுகளில், ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அதனால், அந்நாடுகள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில், ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சி சொல்லும்படியாக இல்லை. நாட்டில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகம் பரவாயில்லை என்று கூறலாம். ஆனால், தமிழகத்திலும் அதிகளவில் ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறினார். சென்னை பல்கலையில் 469 பேர் ஆராய்ச்சிக்கு பதிவு (ஜூலை 2010 முதல் ஜூன் 2011 வரை): பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்வோர் - 140 பேர்முழு நேர ஆராய்ச்சியாளர்கள் - 114பகுதி நேர ஆராய்ச்சியாளர்கள் - 26 கல்லூரிகள்: முழு நேர ஆராய்ச்சியாளர்கள் - 174பகுதி நேர ஆராய்ச்சியாளர்கள் - 112 ஆராய்ச்சி நிறுவனங்கள்: முழு நேர ஆராய்ச்சியாளர்கள் - 36, பகுதி நேர ஆராய்ச்சியாளர்கள் - 7மொத்த ஆராய்ச்சியாளர்களில், ஆண்கள் 242 பேர்; பெண்கள் 227 பேர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்