‘குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வு’: கபில் சிபல் மறுப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.,) சேர, நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 60ல் இருந்து 80 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாக செய்திகள் வெளியாயின. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர் கபில் சிபலுக்கு எழுதிய கடிதத்தில்,‘அரசின் இந்த முடிவால், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர முடியாத நிலை ஏற்படும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமைச்சர் கபில் சிபல் இந்த தகவலை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.ஐ.டி.,யில் சேர, நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்தப் போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல. சில மீடியாக்கள் இதை தவறாக வெளியிட்டு விட்டன. கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) நடைமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து தான் பேசப்பட்டது. தகுதி மதிப்பெண் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மதிப்பெண்களை அதிகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. இதில் நேரடியாகவே, மறைமுகமாகவோ தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.