அரசு பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்ப கால அட்டவணை
ராமநாதபுரம்: தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல் குறித்த நெறிமுறைகள், காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன.பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணி நியமனம் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.மே 1க்குள் உபரி ஆசிரிய பணியிடங்களை கணக்கீட்டு மே 31 க்குள் தேவையுள்ள பள்ளிகளில் நியமிக்க வேண்டும். அனைத்து வகையான ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 30க்குள் நடத்தப்படவேண்டும். ஜூலை 1க்குள் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஜூலை 15க்குள் நிரப்ப கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்ப வேண்டும்.அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துருக்கள் மீது அரசாணை செப்., 30க்குள் வெளியிட வேண்டும். அதில் குறிப்பிடப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியகுழு, அதன் நிதித்துறை உறுப்பினர்களின் ஒப்புதலை உறுதி செய்த பின் அறிவிப்புகளை அக். 31 க்குள் வெளியிட வேண்டும். ஜன., 31 க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தி, அதன் முடிவுகளை ஏப்., 30 க்குள் வெளியிட வேண்டும். இறுதிப்பட்டியல் மே 1 முதல் 31 க்குள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் பள்ளிக்கல்வி இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.