நாமக்கல் பி.ஜி.பி., வேளாண் அறிவியல் கல்லுாரிக்கு அங்கீகாரம்
நாமக்கல்: நாமக்கல், பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரிக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, பி.ஜி.பி., குழும தலைவர் பழனி ஜி பெரியசாமியின் அறிவுறுத்தல்படி, துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி கூறியதாவது:தரத்தின் அடிப்படையில், நிறுவனத்திற்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரமாகும். தமிழகத்தில் உள்ள, 28 தனியார் வேளாண்மை கல்லுாரிகளில், 5 கல்லுாரிகளுக்கு மட்டுமே இந்த தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரியும் ஒன்று. நாமக்கல் மாவட்டத்தில், 2013ல் முதன்மை கல்லுாரியாக தொடங்கப்பட்டது. இதில், ஏழு பேட்ச் மாணவர்கள் வேளாண்மை இளநிலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பு முடித்து சென்றுள்ளனர்.இந்த அங்கீகாரம் மூலம், இக்கல்லுாரி மாணவர்கள், வெளி மாநிலம், நாடுகளில் சென்று தங்களுடைய முதுகலை படிப்பை மேற்கொள்ள துணையாக இருக்கும். மேலும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையங்களிலும் பணிபுரிய முடியும். இந்த அங்கீகாரம் பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கும், பி.ஜி.பி., குழுமம் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.