உள்ளூர் செய்திகள்

வகுப்புக்கு வரவில்லை என்பதால் மாணவரை தாக்கிய ஆசிரியர்கள்

சுங்கதகட்டே: இரண்டு நாட்கள் வகுப்புக்கு வரவில்லை என்பதால், மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது பெற்றோர் புகார் செய்துள்ளனர்.பெங்களூரின் சுங்கதகட்டேவில் உள்ள தனியார் பள்ளியில் திவ்யா என்பவரின் மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த வாரம் இரண்டு நாட்கள், இவர் பள்ளிக்கு வரவில்லை. மூன்றாவது நாள் பள்ளிக்கு வந்த மாணவரை சில ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் வகுப்பு முடிந்த பின், இருட்டறையில் அடைத்து, பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை, கால்களில் தழும்புகள் ஏற்பட்டன.பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவர், பயந்து நடுங்குவது, அலறியபடி ஓடுவது என, விசித்திரமாக நடந்து கொண்டார். பீதியடைந்த பெற்றோர், மகனை மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த போது, அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தது. மகனிடம் விசாரித்த போது, தன்னை இருட்டறையில் வைத்து தாக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.இது குறித்து, ஆசிரியர்களிடம் விசாரித்த போது, மாணவர் கஞ்சா புகைத்ததால், அடித்ததாக குற்றம் சாட்டினர். தங்களின் தவறை மூடி மறைக்க, மாணவர் மீது பொய்யாக குற்றம்சாட்டுவதாக, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் மீது, காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர், போலீசாரும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்