நீட், ஜே.இ.இ., பயிற்சிகளை கைவிட்டது ஆதிதிராவிடர் நலத்துறை
சென்னை: தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ், 98 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்கள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், தேர்ச்சி பெற்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, சிறப்பு பயிற்சி வகுப்புகள், கடந்த 2023ல் தொடங்கப்பட்டது.பொதுத் தேர்வுக்கு முன், மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கென பிரத்யேக ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த 2023ல் திட்டம் தொடங்கப்பட்ட போது, அதில் சேர்ந்த மாணவர்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை. எனவே, அதிகாரிகள் பயிற்சி திட்டத்தை, தொடர முன்வரவில்லை. ஆனால் பட்ஜெட்டில், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே, பயிற்சி வகுப்பை தொடர வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, மாநில ஆதிதிராவிடர் நல விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் எந்த மாவட்டம் முதல் இடம் பிடித்தது, மதிப்பெண் எவ்வளவு என்ற தரவுகளை, அதிகாரிகள் வெளியிடாமல் மறைத்து வருகின்றனர். அதே போல், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதை உடனடியாக நடத்த வேண்டும்' என்றனர்.