மனித நேய அறக்கட்டளை பயிற்சி: குரூப்-2 தேர்வில் 57 பேர் தேர்ச்சி
சென்னை: மனித நேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 57 பேர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மையத்தின் பயிற்சி இயக்குனர் வாவூசி கூறியதாவது:இந்த மையத்தில் சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் தங்குமிடம், உணவு, புத்தகம், வகுப்புகள் என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு பயின்ற 57 பேர், 2009ம் ஆண்டு குரூப்-2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், எங்கள் மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கும் இலவசமாக விடுதியில் தங்கி பயிற்சி பெற வசதிகள் செய்து தரப்படும். விருப்பப்படுவோர், சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையம், மனித நேய அறக்கட்டளை, 28, முதலாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-600 035. தொலைபேசி: 044-2435 8373 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். www.saidais.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வாவூசி கூறினார்.