உள்ளூர் செய்திகள்

மாணவர்கள்அவதி; இலவசங்களை பெற காத்திருப்பதால் சிரமம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அரசியல்வாதிகளுக்காக பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள், லேப் டாப் கம்ப்யூட்டர் ஆகியவற்றை அந்தந்த பகுதியின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மூலம்தான் வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பள்ளி நிர்வாகங்கள் அல்லது தலைமையாசிரியர் நேரடியாக வழங்குவதற்கு கல்வித் துறை அதிகாரிகள் வாய்மொழி தடை பிறப்பித்துள்ளனர். இதனால் அரசியல்வாதிகள் வருகையை எதிர்பார்த்து, விழா நடத்தி இலவசங்களை விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகங்கள் உள்ளன. இலவச சைக்கிள்கள் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 முடித்துள்ள மாணவர்களுக்குத்தான் லேப்டாப் வழங்கப்படுகிறது. அந்த மாணவர்கள் தற்போது வெளியூர் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு வசதியான நாளில் விழா நடத்துமாறு கூறிவிடுகின்றனர். பள்ளி மூலம் தகவலறியும் மாணவர்கள் கல்லூரியில் விடுப்பு எடுத்து கொண்டு வரவேண்டியுள்ளது. இவ்வாறு வந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் விழா நடப்பதில்லை. சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் அரசியல்வாதிகளுக்காக மாணவர்கள், பெற்றோர் நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது. இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்து கொண்டு இரவில் நீண்ட தூரம் பயணித்து மாணவர்கள் வருகின்றனர். காலையில் லேப்டாப் வழங்கினால் மீண்டும் கல்லூரிக்கு திரும்ப வசதியாக இருக்கும். அரசியல்வாதிகள் வசதிக்காக மாலை ஐந்து மணிக்கு விழா நடத்துகின்றனர். மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வருங்காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்