உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு!

கோவை: வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள், ஆன்லைன் வாயிலாக வேலைவாய்ப்பு தேடி, லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க, &'சைபர்&' கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில், நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் தான் அதிகளவு நடந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வளர, அதன் மூலம் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில், ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை பதிவு செய்வதால், பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இதேபோன்று இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. கோவையில், கடந்த சில ஆண்டுகளாக &'ஆன்லைன்&' மூலம் மோசடி செய்வது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பறிப்பது கணிசமாக அதிகரித்து வருகின்றது. இ-மெயில் வாயிலாக லாட்டரியில் பணம் விழுந்திருப்பதாக சொல்லி, மோசடிகள் நடக்கின்றன. குழந்தைகளிடம் போனில் பேசி, அவர்களது பெற்றோரின் தகவல்களை பெற்று, மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. கோவை மாநகரில், கடந்தாண்டு நெட் பேங்கிங், ஆன்லைன் மோசடி தொடர்பாக, ௨௫ வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு எட்டு மாதங்களில் மட்டும், 72 வழக்குள் பதிவாகியுள்ளன. ஆன்லைன் லாட்டரி மோசடிகள் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாக, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து மோசடி செய்வது தொடர்பாக கடந்தாண்டு ஆறு வழக்குகள் பதிவாகியிருந்தன. நடப்பாண்டு ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், வெளிநாட்டு மோகத்தில் இளைஞர்கள் முன்னெச்சரிக்கை இன்றி பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் உள்ளன. இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் போலீசாரை அணுகலாம். சமூக வலைதளங்களில் என்னென்ன தகவல்களை வெளியிட வேண்டும்; எதை வெளியிட கூடாது என்ற விழிப்புணர்வு இருப்பது அவசியம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்