கடலுார் அரசு கல்லுாரியில் ஜூன் 10ல் சேர்க்கை துவக்கம்
கடலுார்: கடலுார் அரசு கலைக்கல்லுாரியில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.இதில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர்களான விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர் மற்றும் அந்தமான், நிகோபர் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.தொடர்ந்து, முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நடக்கிறது.இதில், கலந்து கொள்ள வரும் மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்ேடா, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.