சமர்ப்பிக்காத விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவு
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பங்களை வாங்கி ஆனால் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இம்முறை பாதியாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 15,156 பேர் விண்ணப்பங்களை வாங்கிவிட்டு சமர்ப்பிக்கவில்லை. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே விண்ணப்ப விநியோகம் துவங்கிவிட்டது. அதனால் ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கினர். தேர்வு முடிவில் தேவையான மதிப்பெண் இல்லாதவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியான பிறகு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதால் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்தது. எனினும், இந்த ஆண்டு கட்-ஆப் போட்டி காரணமாகவே இந்த அளவிற்கு மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்காமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.