உள்ளூர் செய்திகள்

பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது

திண்டுக்கல்: இந்திய தொழில் கூட்டமைப்பு, எம்ப்ளாயபிலிடி பிரிட்ஜ் நிறுவனம் சார்பில் தென்மாநில பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லூரியில் நடந்தது. தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள 47 கல்லூரிகளை சேர்ந்த 950 மாணவர்கள் பங்கேற்றனர். 126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. எம்ப்ளாயபிலிடி பிரிட்ஜ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் இமானுவேல் ஜஸ்டஸ் கூறியதாவது: பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பொறியியல் துறை நிறுவனங்கள் பெரிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். இதனால் சிறிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், சிறிய நகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம். இதனால் நிறுவனங்களுக்கும் ஒரே இடத்தில் பணியாளர்கள் கிடைக்கின்றனர். முகாம் நடத்துவதற்கு முன்பாகவே நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி, அவர்களை தயார்படுத்துகிறோம். இதனால் அவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்