கல்வி உதவித்தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும், சிறுபான்மையின மாணவிகள், மத்திய அரசு வழங்கும் மௌலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தம், ஜெயின், பார்சி மதங்களைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், மாணவிகளுக்கு, மத்திய அரசின் மௌலான ஆசாத் கல்வி அமைப்பு மூலம்,12,000ம் ரூபாய் கல்வி உதவித்தொகை, இரு தவணைகளில், பிளஸ் 1 படிக்கும் போது, 6,000ம் ரூபாய் மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, 6,000ம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கல்விக் கட்டணம், பாடப் புத்தகங்கள், எழுதுப் பொருள்கள் மற்றும் இதரக் கட்டணங்கள் செலுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 1,707 சிறுபான்மையின மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று, 2015-16ம் கல்வியாண்டில், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதத்தின் நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்(அனைத்து வழிகளிலும்) ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, தாங்கள் படிக்கும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தலைமையாசிரியர், பள்ளித் தாளாளர்கள் தங்கள் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்களைப் பெற்று, அதை சரிபார்த்து மௌலான ஆசாத் கல்வி அறக்கட்டளை, கெல்ம்ஸ் போர்டு சாலை புதுடெல்லி-110055 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர்,30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.