ஏலம் விடப்படும் எம்.பி.பி.எஸ்., இடங்கள்
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் தாமதமாவதால் எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஏலம் விடப்படுகின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைகள், எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏலம் விடத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு செல்லுமா என்பது தீர்மானிக்கப்படாத நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.மேலும், முன்தொகை செலுத்தும் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டண சலுகை, நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. நீட் தேர்வில், 500 மதிப்பெண் எடுத்தாலும், பணம் இல்லாதவர்களால் தனியார் பல்கலைகளில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படிக்க முடியாது. அதேநேரம், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும், பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இது சமூக அநீதி.மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு, இனியும் தொடரக் கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.