பி.இ., பி.டெக்., படிப்புக்கு 2.45 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில், பி.இ., பி.டெக்., படிப்புக்கு, 2.45 லட்சம் மாணவ மாணவியர் முறையாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியல் வரும், 29ல் வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 350க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2026 - 27ம் ஆண்டு, பி.இ., பி.டெக்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 3ம் தேதி தொடங்கி, இம்மாதம், 5ம் தேதி நிறைவடைந்தது.மொத்தம், 3 லட்சத்து 2,373 விண்ணப்பங்கள் பதிவாகின. அதில், ஒரு லட்சத்து 35,932 மாணவர்கள்; ஒரு லட்சத்து 9,278 மாணவியர்; 10 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து 45,220 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி முறையாக விண்ணப்பித்துள்ளனர்.பாடத்திட்டத்தை பொறுத்தவரை, மாநில பாடத்திட்டத்தில் படித்த, 2 லட்சத்து 13,898 மாணவர்கள்; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த 28,693 மாணவர்கள்; ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த 1,187 மாணவர்கள்; மற்ற பாடத்திட்டத்தில் படித்த 1,442 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவ மாணவியருக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, 50,373 பேர் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பித்த மாணவ மாணவியருக்கான சம வாய்ப்பு எண் என்ற, 'ரேண்டம் எண்' வரும் 10ம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று தொடங்கி, 20ம் தேதி வரை, 'ஆன்லைனில்' நடக்கிறது. தரவரிசை பட்டியல் வரும் 29ம் தேதி வெளியாகும்.அதன்பின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் குறித்த தேதி வெளியாகும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.