பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை ஆயத்தம்
ஏற்கனவே அறிவித்தபடி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும், 8ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகளை முடித்து, தேர்வுத்துறை தயாராகியுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 - 26 வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 90 மையங்களில், 11 ஆயிரத்து, 930 மாணவர், 14 ஆயிரத்து, 478 மாணவியர் என மொத்தம், 26 ஆயிரத்து, 408 பேர் தேர்வெழுதினர். ஏப்., 8ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி, திருப்பூர் தாராபுரம் ரோடு, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக், தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் துவங்கியது; ஏப்ரல், 20ல் முடிந்தது.அதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் விடைத்தாள் மதிப்பெண்களை பதிவேற்றும் பணி நடந்தது. மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு பணிகள், ஏப்ரல், 25ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, விபரங்கள் தேர்வுத்துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மே முதல் வாரத்துக்கு முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டு விட்டதால், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, மே., 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனீஷ் நாரணவரே, முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளனர்.