17 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதார் இல்லை கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
மதுரை: மதுரை மாவட்டத்தில் 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி குறித்த பகுப்பாய்வுக் கூட்டம் டி.இ.ஓ., செந்தில்குமார் தலைமையில் நடந்தது. பள்ளித் துணை ஆய்வாளர் இந்திரா முன்னிலை வகித்தார். இரண்டு அமர்வுகளாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பங்கேற்றனர்.கூட்டத்தில், 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாததும், 7 ஆயிரம் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்காமல் இருப்பதும் தெரியவந்தது. சிறப்பு முகாம்கள் நடத்தியும், இ சேவை மையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றும் இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.பள்ளிகளில் முரணான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் நடந்தால் மாணவரின் பெற்றோர் கலெக்டரிடம் சென்று புகாரளிக்க இடம் கொடுக்காமல், முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு செயல்பாடுகள் நடந்தால் அதுதொடர்பாக ஆசிரியர்கள் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். அதை பள்ளி ஆய்வுக்கு கலெக்டர் வரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்ணை அதிகரிக்க செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுபோல் மேலுார் கல்வி மாவட்ட ஆய்வுக் கூட்டம் ஓ.சி.பி.எம்., பள்ளியில் டி.இ.ஓ., ரகுபதி (பொறுப்பு) தலைமையில் நடந்தது. கலெக்டரின் புதிய உத்தரவு இக்கூட்டத்தில் கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவின்பேரில் முதன்முறையாக, பங்கேற்ற அனைத்து தலைமையாசிரியர்களிடமும் அவரவர் பள்ளிச் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக கடிதமாக எழுதி அதிகாரிகள் வாங்கினர். அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்வித்துறை மீது கலெக்டர் அதிக கவனம் செலுத்துகிறார். இதனால் பள்ளிச் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் பள்ளிகளில் அவர் தனியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.