வறண்ட ஆறு வசந்தமாவது எப்போது?
மேட்டுப்பாளையம்: 'வறண்டு கிடக்கும் பவானி ஆற்றில், குடிநீருக்கு தண்ணீர் திறந்து விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் நெல்லித்துறையில் இருந்து சிறுமுகை வரை, 22 குடிநீர் திட்டங்களுக்கு, தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வறட்சியின் காரணமாக, பவானி ஆற்றில் நீரோட்டம் குறைந்தது. மேட்டுப்பாளையம், குன்னுார் ஆகிய நகரங்களின் கழிவு நீரும், தொழிற்சாலைகளின் கழிவுநீரும் ஒன்றாக கலந்து ஆற்றில் வந்ததால், ஆற்று நீரின் நிறம் மாறிய நிலையில், துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த ஒரு வாரமாக பவானி ஆற்றில் நீரோட்டம் முற்றிலும் குறைந்து, தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பம்பிங் செய்யாமல் இருப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, பர்சன்ஸ்வேலி, குந்தா, கெத்தை ஆகிய அணைகளில் போதிய தண்ணீர் இருப்பதால், குடிநீருக்காக பில்லுார் அணைக்கு திறந்து விட வேண்டும்' என, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.