உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏமப்பேர் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை: பெரும் விபத்துக்கு முன் நடவடிக்கை தேவை...

ஏமப்பேர் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை: பெரும் விபத்துக்கு முன் நடவடிக்கை தேவை...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் ரவுண்டானாவை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலையில், அங்கு மேம்பாலம் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகிறது. அதேபோல் சென்னை, புதுச்சேரி பகுதியிலிருந்து சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனகலும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து மிகுதியால் இரு வழிச்சாலையாக இருந்த புறவழிச்சாலைகள் அனைத்தும், கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்தாலும், அதற்கேற்ப குறிப்பிட்ட சில இடங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. புறவழிச்சாலை சந்திப்பு மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ள சில முக்கிய இடங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை அடிக்கடி கடந்து செல்கின்றனர். அவ்விடங்களில் அவ்வப்போது விபத்துகள் நடக்கிறது. இதனையொட்டி அதிகளவிலான விபத்துகள் மற்றும் வாகனங்கள் கடக்ககூடிய இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் மூலம் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உளுந்துார்பேட்டையில் இருந்து வரும் போது எலவனாசூர்கோட்டை நுழைவு வாயில், செம்பியமான்தேவி கிராமத்தில் கடந்தாண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது தியாகதுருகம் பைபாஸ் சாலையில் பிரிதிவிமங்கலம் நுழைவு வாயில், இந்திலி பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் நீலமங்கலம் நுழைவு வாயில் பகுதியில் நான்கு வழிச்சாலை பணியின் போதே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் மற்றொரு திசையான ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் இதுவரை மேம்பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் இருந்து சின்னசேலம் மார்கம் செல்லக்கூடிய அரசு, தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தேசிய நெடுஞ் சாலையை கடந்து செல்கிறது. இதற்கிடையே புதிய புறநகர் பஸ் நிலையமும், அப்பகுதியில் அமைத்துள்ளதால் சாலையை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. பழைய பஸ் நிலையம் - புதிய புறநகர் பஸ் நிலையம் செல்லும் அரசு டவுன் பஸ்கள், மினி பஸ்கள் அதிகளவில் சாலையை கடக்கிறது. சேலம் - சென்னை செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய புறநகர் பஸ் நிலையம் மட்டுமே செல்லும் என்பதால், பயணிகள் பெரும்பாலோனர் ஏமப்பேர் ரவுண்டானாவிலேயே இறங்கி கொள்கின்றனர். தற்போது அங்கு வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகளவில் சாலையை கடந்து செல்லும் நிலையில் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !