உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  பிரிட்டனை குளிர்வித்தது மழை 800 விமான சேவை பாதிப்பு

 பிரிட்டனை குளிர்வித்தது மழை 800 விமான சேவை பாதிப்பு

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பலத்த இடியுடன் பெய்த மழையால், ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில், 800க்கும் மேற்பட்ட விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு, ஏராளமான பயணியர் அவதியுற்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருந்தது. இந்நிலையில், வளிமண்டல காற்று மாறுபாடு காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை முதல் பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் லண்டனில் உள்ள இரண்டு பிரதான விமான நிலையங்களான ஹீத்ரூ மற்றும் கேட்விக்கில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன. இரு நிலையங்களிலும், 800க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.

வெயிலுக்கு 1,000 பேர் பலி

ஐரோப்பிய நாடான பிரான்சில், கடந்த 24ம் தேதி முதல் கடுமையான மற்றும் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக, ஒரே வாரத்தில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலியானவர்களில் 85 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய 'இலே - டி - பிரான்ஸ்' பிராந்தியத்தில், முதியோர் பலர் தங்கள் வீடுகளில் தனிமையில் இருந்த போது, வெப்பம் தாளாமல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !