உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  கழிவு மேலாண்மையில்  நிவேதிதாவின் சாதனை

 கழிவு மேலாண்மையில்  நிவேதிதாவின் சாதனை

- நமது நிருபர் - பெங்களூரின் மல்லேஸ்வரத்தை சேர்ந்தவர் நிவேதிதா, இன்ஜினியர். சுற்றுச்சூழல் தொழில்முனைவோராக உள்ள இவர், கழிவு மேலாண்மை துறையில் சாதனை படைத்து வருகிறார். மனித கரங்கள் படாமல் தானியங்கி முறையில் குப்பையை பிரித்தெடுக்கும், 'டிராஷ்கான்' என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். கழிவு மேலாண்மை துறை பயணம் குறித்து, நிவேதிதா கூறியதாவது: கல்லுாரியில் நான் படித்து கொண்டு இருந்த நேரம் அது. எனது வீட்டின் அருகே ஓடும் சாக்கடை கால்வாய் தண்ணீர் சீராக செல்லாத வகையில் குப்பை கொட்டப்பட்டு இருந்தது. மாநகராட்சியிடம் புகார் அளித்த போது, கால்வாயில் கொட்டப்பட்டது மக்கும் குப்பையா அல்லது மக்காத குப்பையா என தெரியாது; அதை எப்படி அகற்றுவது என கேட்டனர். வீடுகள், ஹோட்டல்களில் சேரும் மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து கொடுங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றேன். ஆனால் மக்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. குப்பை சவாலை நிர்வகிக்க தொழில்நுட்ப தீர்வை கையாள நினைத்தேன். தொழில்நுட்பத்தை தனது முக்கிய பாடத்திட்டமாக எடுத்து செய்தேன். கல்லுாரி படிப்பு முடித்ததும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. ஆனாலும், எனது நோக்கம் கழிவு மேலாண்மையை நோக்கியே இருந்தது. எனது அம்மாவின் சேமிப்பு தொகை, இரண்டு லட்சம் ரூபாயுடன், நண்பர் சவுரப் ஜெயினுடன் இணைந்து, 2017ல் டிராஷ்கான் நிறுவனத்தை துவங்கினேன். இரண்டு வருட தீவிர உழைப்பு, பல தோல்விகளுக்கு பிறகு, 'டிராஷ்பாட்' என்ற அதிநவீன இயந்திரத்தை கண்டுபிடித்தோம். வீடுகளில் இருந்து துாக்கி எறியும் கலப்பு குப்பைகளை இந்த இயந்திரத்தில் கொட்டினால் போதும். மனித கரங்கள் படாமலேயே மட்கும், மட்காத குப்பையாக தரம் பிரித்து கொடுத்து விடும். எங்கள் இயந்திரங்களை மாநகராட்சிகள், பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறோம். எதிர்கால சந்ததியினர் பூமியை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். கழிவு என்பது ஒரு வரலாறாக மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், உலக பொருளாதார மன்றம், நிவேதிதாவின் சுற்றுச் சூழல் பயணத்தை பாராட்டி 'வீடியோ' வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !