புத்தக பிரியர்களை ஈர்க்கும் மைசூரின் தெரு நூலகம்
உயர் கல்விக்காகவோ, பணி நிமித்தமாகவோ வெளிநாடுகள் செல்லும் பலர், அங்குள்ள பயனுள்ள பல விஷயங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அவற்றை சொந்த ஊருக்கு திரும்பிய பின், மறந்துவிடுகின்றனர். நம் ஊரில் செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் முகமது ஓமர் உல் ஹக், லண்டனில் கண்ட திட்டத்தை, மைசூரில் செயல்படுத்தி உள்ளார். மைசூரு நகரில் வசிப்பவர் முகமது ஓமர் உல் ஹக், 32. இவர் சில ஆண்டுகள் லண்டனின் பிரசித்தி பெற்ற பிரிட்டீஷ் லைப்ரரியில், புராஜெக்ட் ஆபீசராக பணியாற்றினார். அங்கிருந்த 'தெரு நுாலகம்' அவரை, வெகுவாக கவர்ந்தது. வீதிகளில் சாலை ஓரத்தில் சிறிய நுாலகம் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் இங்குள்ள புத்தகங்களை எடுத்து படித்துவிட்டு, மீண்டும் அங்கு வைக்கலாம். படிக்கும் ஆர்வம் அதே போன்று, மைசூரிலும் 'தெரு நுாலகம்' அமைக்க முகமது ஓமர் விரும்பினார். அதன்படி மைசூருக்கு திரும்பிய ஒரே ஆண்டில், குவெம்பு நகர் உட்பட சில இடங்களில் நுாலகம் அமைத்துள்ளார். புத்தக பிரியர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. பொது மக்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த நுாலகத்தை அவர் அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே அறக்கட்டளை அமைத்து, மக்களுக்கு தொண்டு செய்கிறார். இப்போது நுாலகம் அமைத்து, மற்றொரு நற்பணி செய்துள்ளார். தன் சொந்த செலவில், சாலை அருகிலேயே சிறிய நுாலகம் கட்டியுள்ளார். இதில் கன்னடம், ஆங்கில மொழி கதைகள், கவிதை புத்தகங்கள், தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல்வேறு புத்தகங்கள் உள்ளன. பொது மக்கள், புத்தகத்தை எடுத்து சென்று படிக்கலாம்; படித்து முடித்த பின், மீண்டும் நுாலகத்தில் வைத்துவிட்டு, வேறு புத்தகத்தை எடுத்து கொள்ளலாம். புத்தகங்களை முகமது ஓமர், பணம் கொடுத்து வாங்கவில்லை. நன்கொடையாளர்களிடம் புத்தகங்களை சேகரிக்கிறார். ஏற்கனவே 500 புத்தகங்களுக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நுாலகத்துக்கு புத்தகங்களை, தானமாக வழங்கலாம். கியூ.ஆர்.குறியீடு நுாலகங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள, 'கியூஆர் குறியீடு' வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால், நுாலகம் உள்ள இடம் மற்றும் அதை பற்றிய தகவல் கிடைக்கும். புதிய நுாலக திட்டத்துக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சாலை ஓரத்தில் அமர்ந்து புத்தகம் படிக்கும் பொது மக்களை, மைசூரில் பார்க்க முடிகிறது. வரும் நாட்களில் மேலும் பல இடங்களில், நுாலகம் அமைக்க முகமது ஓமர் திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டில், தான் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை, தன் சொந்த ஊரிலும் செயல்படுத்திய இவர், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். - நமது நிருபர் -