பறவையே எங்கு இருக்கிறாய்...
அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலைப்பொழுது. முழுமையாக கதிரவனே கண்விழிக்காமல், மேகக்கூட்டங்களின் நடுவே மறைந்திருந்த தருணத்தில், சில பெண்கள் மட்டும் கையில் பைனாக்குலருடன், கோவை வாலாங்குளத்தில் குவிந்தனர். சில வினாடி களிலே, குழுவாக பிரிந்து கண்களை பைனாக்குலருக்குள் சுருக்கினர். எதையோ கண்ட பரவசம் அவர்கள் முகத்தில் தென்பட்டது. என்னதான் நடக்கிறது என்ற ஆச்சர்யத்துடன் அவர்களை அணுகியபோது, அனைவரும் சுட்டிக் காட்டிய நபர், அனுாப். அவரிடம் கலந்துரையாடுகையில்.. . உங்களை பற்றி?
என் பெயர் அனுாப். இயற்கை மீதான தீராத காதலால், சூழலியல் துறையில் முனைவர் படிப்பு முடித்துள்ளேன். சுற்றுச்சூழல், தட்பவெப்ப மாற்றம் சார்ந்த ஆய்வுகள், விழிப்புணர்வு கல்வி அளிக்கும் நோக்கில், தடாகம்ரோடு, இடையர்பாளையத்தில், சித்தார்த் பவுண்டேஷன் என்ற அமைப்பை, 2015 ல் துவங்கினோம். நிறைய ஆய்வுகள், களப்பணிகள் மேற்கொள்கிறோம். வீட்டிலிருக்கும் பெண்களை சூழலியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கில், 'வுமன் வெட்லாண்டு வாட்ச்' (Women Wetland Watch) என்ற திட்டத்தை, 2023ல் ஆரம்பித்தோம்.
இதன் செயல்பாடுகள் என்ன?
மாதந்தோறும் ஒருமுறை அல்லது இருமுறை, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அச்சூழலில் வாழும் பறவைகள், பூச்சிகள், சூழல் இயக்கத்தில் அதன் பணிகள் குறித்து எடுத்துரைக்கிறோம். இதில், 450 பெண்கள் இணைந்துள்ளனர். அவரவர் வசதிக்கேற்ப, அவ்வப்போது நிகழ்வுகளில் பங்கேற்பர். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. இங்கே வரும் சிலர் குழந்தைகளுடன் வருவர். பணிஓய்வு பெற்றவர்கள், இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள நினைப்பவர்கள் என, எல்லா வயதினரும் வருவர். சிலர் பறவைகள், பூச்சிகளை பார்த்ததும் அதை படமெடுத்து அதைப்பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தொகுக்கின்றனர். சிலர் பறவைகளை வரைகின்றனர். மற்றவர்களுடன் நேரம் செலவிட வருவோரும் இருக்கின்றனர். எங்களின் நோக்கம், பெண்கள் வாயிலாக, அவர்கள் குடும்பத்தில் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமே. உக்கடம், வாலாங்குளம், குறிச்சிக்குளம், செல்வம்பதி, சிங்காநல்லுார், வேடப்பட்டி என, 12 இடங்களில் இருக்கும் நீர்நிலைகளுக்கு இதுவரை பயணித்துள்ளோம். இப்பெண்கள் இணைந்து, 125 வகையான பறவைகள், பூச்சிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். புதிதாக இக்கூட்டத்தில் இணைவோருக்கு, தொடர்ந்து இந்நிகழ்வுகளுக்கு வருவோரே வழிகாட்டுகின்றனர்.
எதிர்கால திட்டம்?
கடந்த இரண்டு ஆண்டுகளில், நீர் நிலைகளுக்கு வரும் பறவைகள், பூச்சிகளை தொடர்ந்து அடுத்தடுத்த சீசனில் பார்க்க முடிவதில்லை. இவை எங்கே போயின? காலநிலை மாற்றத்தில் இவற்றின் பங்களிப்பு குறித்த கேள்விகள், இவர்களுக்குள்ளே எழுகிறது. இப்படி எழும் பல்வேறு கேள்விகள் தான், இயற்கை ஆர்வலராக மாற்றும். சூழலியல் இயக்கத்தில், பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதே திட்டம். அம்மாற்றம் தாமாக நிகழ வேண்டும். இதற்காக நிறைய விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம், என்றார்.