விடியும் வரை கிறுக்குவேன்
செப்., 29: 'உதயநிதிக்கு எப்போது துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்' என்று அமைச்சர் சுப்பிரமணியன் சொன்னபின், அம்மக்களை சந்தித்து ஆசி பெறும் ஆசை எனக்குள்! செப்., 30: 'டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பெருமைக்குரிய அரசுப்பள்ளியில் பயின்று இந்தஅளவிற்கு உயர்ந்துள்ளார்' என்று முதல்வர் பேசியிருப்பதால், அமைச்சர்களின் வீட்டு குழந்தைகள் இனி அரசுப்பள்ளி நோக்கி வருவது நிச்சயம்! அக்., 01: 'ஒன்றுக்கு அடுத்து மூன்று' எனச் சொன்ன குழந்தைக்கு பரிசு தந்தேன்; அமைச்சரவை பட்டியலில் முதல்வருக்கு முதல் இடம்... அமைச்சர் துரைமுருகனுக்கு இரண்டாவது இடம்... துணை முதல்வர் உதயநிதிக்கு மூன்றாவது இடம்... குழந்தை சொன்னது சரிதான்! அக்., 03: 'எனக்கு துணையாக அல்ல... மக்களுக்கு துணையாக உதயநிதி இருப்பார்' என முதல்வர் சொல்லி விட்டதால், இனி தமிழகத்தில் சங்கிலி பறிப்பு நிகழாது; குடிகார கணவன் கை ஓங்க மாட்டான்; பள்ளிகளில் பாலியல் குற்றம் அரங்கேறாது! அக்., 04: 'கடவுளை பரப்புபவன் அயோக்கியன்' எனச்சொன்ன ஈ.வெ.ரா., வாழ்ந்த மண்ணில், 'எங்களின் மூலவர்... முதல்வர் ஸ்டாலின்; உற்சவர்... துணை முதல்வர் உதயநிதி' என சட்டத்துறை அமைச்சர் போற்றுவது பகுத்தறிவு ஆகும்.