உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  ஐந்து மாநில சட்டசபை தேர்தல்: எஸ்.ஐ.ஆரால் மாற்றம் ஏற்படுமா?

 ஐந்து மாநில சட்டசபை தேர்தல்: எஸ்.ஐ.ஆரால் மாற்றம் ஏற்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த சில மாதங்களாகவே, சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 23, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல், 9ம் தேதியன்று ஒரே கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல், 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என, கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே, 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், கொள்கை ரீதியாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., கட்சியை எதிர்க்கக்கூடிய, தி.மு.க., - கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. அதனால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க., பலமான கூட்டணி அமைத்துள்ளதால், மீண்டும் வெற்றி உறுதி என, நம்புகிறது. அதேநேரத்தில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வானது, தி.மு.க., அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி, தங்களது வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போதைய நிலவரப்படி, தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகளை பிரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், எந்தக் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும். அண்டை மாநிலமான கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அணி, தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால், அரசுக்கு எதிராக அதிருப்தி அலை உருவாகி இருப்பதாகவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், காங்., கூட்டணியில் ஒழுங்கின்மை, கோஷ்டி பூசல்கள் மற்றும் தேர்தல் பிரசார உத்தியில் இடைவெளிகள் என, சில குறைபாடுகள் உள்ளதால், அவற்றை எல்லாம் சாதுர்யமாக கையாண்டால் மட்டுமே, அந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். மேற்கு வங்கத்தில் படிப்படியாக தன் செல்வாக்கை அதிகரித்து வந்துள்ள பா.ஜ., தற்போது பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி விட்டு, அந்த மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பதில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், இந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, 60 லட்சம் வாக்காளர்களின் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், எரிச்சல் அடைந்துள்ள முதல்வர் மம்தா, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக, அக்கட்சி சார்பில், பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நீக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஐந்து மாநில தேர்தலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகே நடைபெறுகின்றன. அதனால், சிறப்பு திருத்தத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கலாம் என, நம்பப்படுகிறது. அந்த முடிவுகள் தற்போதைய ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகுமா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகுமா என்பது மே, 4ம் தேதிக்கு பிறகே தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 23, 2026 08:42

பல நீக்கப்படவேண்டிய பெயர்களை நீக்க விடாமல் செய்தது. ஊடுருவாகாரர்களின் பெயர்களை நீக்க விடாமல் செய்தது.. இவ்வாறாக தென்னக மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை. ஆகவே தேர்தல் கமிஷனுக்கும், ஜனநாயகத்துக்கு தோல்விதான்...


spr
மார் 23, 2026 08:34

இந்தியா போன்ற நாட்டில், அனைத்து விதமான சில தேவையற்ற, அரசியல் ரீதியான எதிர்ப்புக்களுக்கும் இடையில், மக்கள் தொகைக்கு கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் சாதனையே. இதில் மக்களின் பங்கேற்பே மிகவும் முக்கியம். சலுகைகள் பெற வாக்காளர் அட்டை அவசியம் என்பதால் பதிவு செய்பவர்கள் இறந்த உறவினர்கள், அல்லது பிற இடங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயரை நீக்க/முகவரியை மாற்ற முனைப்பெடுப்பதில்லை. இன்னமும் வாக்காளர் பதிவுக்கும் வாக்காளர் அட்டை பெறுவதையும் "ஆன்லைன்" எனும் முறையில் செய்ய கணிணி முறை முழுமையாக உதவவில்லை என்பதுவும் உண்மையே. கணக்கெடுக்கும் பணியாளர் அந்தந்த மாநில அரசின் அழுத்தத்தால் தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதாலேயே தேவையற்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடை விதிக்கும் நீதித்துறை, இத்தனைக்கும் நடுவில், 10 அல்லது 20 விழுக்காடு தவறு இருந்தாலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறைவேறியது மாபெரும் சாதனையே பாராட்டுவோம் நம்மால் முடிந்தவரை அதனைச் சீர் செய்ய முயலுவோம்


Kasimani Baskaran
மார் 23, 2026 08:07

கள்ள ஓட்டு மூலம் வென்றவர்கள் மண்ணைக்கவ்வ வாய்ப்பு இருக்கிறது.


GMM
மார் 23, 2026 07:28

இதுவரை இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். பட்டியலில் இருந்தால் அந்த தொகுதியில் இருக்கார் என்று பொருள். இவர்கள் வாக்கை அதிகாரம் பயன்படுத்த ஆளும்கட்சி செலுத்தி விடும்? தற்போதைய சிறப்பு திருத்தம் முழுமை பெற வில்லை. உச்ச நீதிமன்றம் அதிகம் தலையிட்டு தன் அதிகாரம் காட்ட விரும்பி விட்டது. குடிமகன் இன்னும் பதிவு இல்லை. பெற்றோர், முன்னோர் விவரம் பிறப்பு, பள்ளி சான்று தான் ஆதாரம். இதன் உண்மை தன்மை அறிய வேண்டும். கள்ள நோட்டு அச்சிடும் போது இந்த சான்று தயாரிப்பது கடினம் அல்ல. ஆதார் ஆதாரம் அல்ல. மேற்கு வங்க, தமிழக தேர்தலை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்த வேண்டும்.


SUBBU,MADURAI
மார் 23, 2026 02:45

2019 முதல் 2025 வரையிலான காலத்தில் தீதி மம்தா பானர்ஜி ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் 2,277 நிறுவனங்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டன. அந்த லெட்சணத்தில் அங்கு மம்தாவின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் மம்தா வெற்றி பெறுவது சந்தேகமே!


SUBBU,MADURAI
மார் 23, 2026 02:40

How to benefit from worst governance? Once upon a time, Bengal was richest state in India WB chose liberalism and got poorer and poorer Recently, WB became poorer than Odisha Now ruling liberals in WB ask votes by saying Bengali migrants treated badly in Odisha!


SUBBU,MADURAI
மார் 23, 2026 02:37

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற SIR விசாரணைகளின் போது, ​​வாக்காளர் சரிபார்ப்புக்கு பின் வசிப்பிடச் சான்றிதழ்கள் செல்லுபடியாகும் ஆவணங்கள் அல்ல என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது. அவற்றைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் புதிய விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை